
கிள்ளான், மார்ச்-3-போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயாவில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு உபயங்களுடன் 10-நாள் விழாவாக கொண்டாடப்பட்டு, உச்சக் கட்டமாக இன்று இந்த 50-ஆம் ஆண்டு மாசி மகம் மகோற்சவம் நடைபெற்றது.
காலையிலேயே பூஜையுடன் தொடங்கி, ஆலய சக்தி கரகம் மற்றும் பால்குடம் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து பால் அபிஷேகம், கும்பநீர் அபிஷேகம், திருவிழா அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் என விழா களைக்கட்டியது.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த முன்னாள் துணையமைச்சரும், ம.இ.காவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமான தான் ஸ்ரீ க. குமரனுக்கு சிறப்புச் செய்யப்பட்டது.
இவ்வாண்டு மாசிமகத் திருவிழா ஒரு குறையுமில்லாமல் வெகு சிறப்பாக நடைபெற்றதாக ஆலயத் தலைவர் ஜி. ராஜரத்னம் கூறினார்.
ஆலயப் பொருளாளர் வி. முத்தையாவும் மகிழ்ச்சித் தெரிவித்தார்.*INTERVIEW*
நமது சமயப் பண்பாட்டுக் கூறுகள் தொன்றுதொட்டு காக்கப்படுவதற்கு இதுபோன்ற திருவிழாக்களும் தக்க சான்று என தான் ஸ்ரீ குமரன் வணக்கம் மலேசியாவிடம் கருத்துரைத்தார்.
120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் முன்பு போர்ட்கிள்ளானில் அமையப் பெற்றிருந்தது.
பின்னர் 1971-ஆம் ஆண்டு பண்டமாரான் ஜெயாவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு ஆலயம் சிறப்பாக இயங்கி வருகின்றது.
அவ்வகையில், கால ஓட்டத்தில் சிறப்புகள் எதுவும் குறையாமல் இந்த மாசிமக திருவிழா விமரிசையாக நடைபெறுவதாக பக்தர்கள் கூறினர்.
உள்ளூர் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்ற வேளை, நிறைவு விழாவாக நாளை இரத ஊர்வலம் நடைபெறுகிறது.



