
அலோர் காஜா, ஜூலை.10 – மலாக்காவில் இடைநிலைப் பள்ளியொன்றில் மாணவர் ஒருவர் கத்தியுடன் சக மாணவர்களைத் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று பள்ளியில் இணைப்பாட வகுப்பின் போது அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பதற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பிற்பகல் 3 மணியளவில், சம்பந்தப்பட்ட முதலாம் படிவ மாணவர், பள்ளி மண்டபத்திலிருந்து தொழுகை அறை வரை தனது வகுப்புத் தோழர்களைத் துரத்தியுள்ளார். பின்னர் ஆசிரியர்களும் மாணவர் தலைவர்கள் சிலரும் அம்மாணவரைச் சமாதானப்படுத்தி, கத்தியைப் பறித்தனர். அம்மாணவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், மருந்து உட்கொண்டு வந்ததாகவும் நம்பப்படுகிறது. அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இவ்வேளையில் அச்சம்பவம் தொடர்பில் , விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என்றும் மாவட்ட காவல்துறைத் தலைவர் Superintendent Ahmad Abu Bakar தெரிவித்திருக்கிறார்
சில நாட்களுக்கு முன்னர்தான் Bantingங்கில் இடைநிலைப் பள்ளியொன்றில் மாணவி ஒருவர் சக மாணவியைக் கத்தியால் குத்தி காயப்படுத்தினார். சம்பந்தப்பட்ட மாணவி தற்போது விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தொடர்ச்சியாக மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.



