
மலாக்கா, ஜூலை 1 – பள்ளிவாசல் அறையில் 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 73 வயது வயோதிகன், மலாக்கா ஆயர் கெரோ (Ayer Keroh) நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்துள்ளான்.
ஜூன் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செமாபோக்கிலுள்ள (Semabok) பள்ளிவாசல் அறையில் இரண்டு சிறுமிகளிடம் அக்குற்றவாளி தனித்தனியாக பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அம்முதியவன் மீது சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம், 10,000 ரிங்கிட் ஜாமீனில் ஒருவரின் உத்தரவாதத்துடன் குற்றவாளியை விடுவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை தொடர்புகொள்ளக் கூடாது என்றும் மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த வழக்கு ஜூலை 29 ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.



