
மலாக்கா, ஜூன்-11 – மலாக்கா இந்தியச் சமூகத்தினரின் இறுதிச் சடங்கு சடங்குத் தளம் தொடர்பான விவகாரத்தில், சமூக ஊடகங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் அரசியல் விவாதங்களுக்கு மாநில அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பி. சண்முகம், மக்களின் நலனுக்கும், மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த விவகாரம் சட்ட ரீதியாகவும், விரிவாகவும் ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்த இவகாரம் 100 நாட்களில் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனது குறித்தும் சமுகம் விளக்கினார்.
என்றாலும், மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் இந்தியச் சமூகத்தின் தேவைகள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் நியாயமான மற்றும் நடைமுறைக்கு உகந்த ஒரு சிறந்த தீர்வு எட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ம.இ.கா ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறப்படுவதை முற்றாக மறுத்த அவர், இந்த விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளையும், யூகங்களையும் பரப்பி, நிலவி வரும் சுமுகமான மற்றும் நல்லிணக்கச் சூழலைக் கெடுக்க வேண்டாம் என அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
ஜோகூர் தெலுக் ஜாவாவில் உள்ள அதிநவீன ‘இந்து இறுதிச் சடங்கு வளாக’ மாடலில், மலாக்கா மாநில இந்து சமுதாயத்திற்கு மிகவும் முறையான, சுகாதாரமான மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட ஓர் இறுதிச் சடங்கு வளாகத்தை உருவாக்கும் முயற்சிக்கான கடப்பாட்டையும் சண்முகம் உறுதிப்படுத்தினார்.
மலாக்காவில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தப்பட்டதாகக் கூறி, இந்து சமய இறுதிச் சடங்கு ஒன்று அதிகாரிகளால் நிறுத்தப்பட்டதோடு, தலைமைப் பூசாரிக்கு மலாக்கா வரலாற்று நகராண்மைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இறுதிச் சடங்குக்கான இடம் குறித்த விவகாரம் அங்கு சூடுபிடித்துள்ளது.



