
கோலாலம்பூர், மார்ச்-7-எதிர்வரும் மலாக்கா மற்றும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிட வேண்டும் என, மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவின் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ஜோகூரில் தேசிய முன்னணி தனித்தும், மலாக்காவில் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழும் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால், அவ்விரு மாநிலங்களிலும் தேசிய முன்னணியே ஆட்சியைப் பிடித்தது.
எனவே, வரும் தேர்தல்களிலும் மக்கள் ஆதரவை நேரடியாகச் சோதித்து பார்க்க, தேசிய முன்னணி தனித்து போட்டியிடுவதே சரியானதாக இருக்குமென கா சியோங் சொன்னார்.
தேசிய அளவில் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றாலும், மாநிலத் தேர்தல்களில் வேறுபட்ட அரசியல் யுக்திகளைப் பயன்படுத்துவது புதிதும் அல்ல தவறானதும் அல்ல என்றார் அவர்.
ஜோகூர் சட்டமன்றத்தில் தற்போது தேசிய முன்னணி வசம் 40 இடங்கள் உள்ளன; மலாக்காவில் 21 இடங்களை அது வைத்துள்ளது.
மலாக்கா சட்டமன்றத்திற்கு இவ்வாண்டு இறுதிக்குள்ளும், ஜோகூர் சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு பிப்ரவரி மத்திக்குள்ளும் தேர்தல் நடந்தாக வேண்டியுள்ளது.



