
சிங்கப்பூர், ஏப் 22 -ஈரான் போரினால் வெளிச்சத்திற்கு வந்த ஒரு முக்கிய வர்த்தக பகுதியான மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணை வழியாகப் பயணிப்பது அனைவருக்கும் தடையின்றி இருக்க வேண்டும் என்றும், அதைத் தடைசெய்யும் எந்தவொரு முயற்சிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் ஆதரிக்காது என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
அனைவருக்கும் போக்குவரத்துக்கான உரிமை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற CNBC நிகழ்வில் அளித்த பேட்டியில் அவர் சுட்டிக்காட்டினார்.
எங்கள் அண்டைப்பகுதியில் நீரிணையை மூடவோ, தடைசெய்யவோ அல்லது டோல் கட்டணம் அமல்படுத்தும் எந்தவொரு முயற்சிகளிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தி பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் ஆகிய இரு நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு சிங்கப்பூர் மற்ற நாடுகளால் எப்போதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, “எங்களைப் பொறுத்தவரை இதுவரை இல்லையென்றாலும் அவர்கள் அவ்வாறு செய்யக்கூடும் என்று விவியன் பாலகிருஷ்ணன் மறுமொழி தெரிவித்தார்.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள மலாக்கா நீரிணை, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே எரிசக்தி மற்றும் பொருட்களுக்கான முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதையாகும்.



