
கோலாலம்பூர், ஜூன்-29 – மலேசியாவில் இந்து உரிமைகளை பாதுகாக்கும் கடப்பாட்டை மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP மறுஉறுதிச் செய்துள்ளது.
எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் உறுப்புக் கட்சியாக இருந்தாலும், இந்நாட்டு இந்துக்களின் உரிமைகளுக்காக நிச்சயம் போராடுவோம் என, அதன் தலைவர் எஸ். புனிதன் கூறினார்.
இந்துக்களின் குரலுக்கு தேசிய அளவிலான கொள்கைமுறையில் வலிமையான பிரதிநிதித்துவம் தேவை என்பதை MIPP வலியுறுத்தும்.
நமது சமயம், கலாச்சாரம் மற்றும் அடையாளங்களைப் பாதுகாக்க இது மிகவும் அவசியமாகும்.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் 43-ஆவது தேசியப் பேராள மாநாட்டில் பங்கேற்ற பிறகு வெளியிட்ட அறிக்கையில் அவர் அவ்வாறு சொன்னார்.
இந்து மதத்தின் மதிப்பீடுகளை, ஆன்மிகக் கல்வியை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை மேம்படுத்தும் பணியில் இந்து தர்ம மாமன்றம் தீவிரமாக பாடுபட்டு வருவதும் பாராட்டுக்குரியது.
சனாதன தர்மத்தின் பண்பாடுகள், ஒற்றுமை மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளும் அவர்களின் சேவையையும் பாராட்டுவதாக புனிதன் சொன்னார்.
மலேசியா முழுவதிலுமுள்ள பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டது, இந்து ஆன்மிக, கலாச்சார அமைப்புகளின் முக்கியத்துவத்தையும், அவர்களின் பங்களிப்பையும் காட்டுகிறது.
இந்நிலையில் தானும் MIPP-யும், இந்து தர்ம மாமன்றம் மற்றும் அனைத்து இந்து அமைப்புகளுடன் இணைந்து, மலேசியாவில் இந்து சமுதாய உரிமைகள், மதச்சுதந்திரம், கோயில் தன்னாட்சி ஆகியவற்றைப் பாதுகாத்து, பாரம்பரியத்தின் குரலாக இருக்க அவர் உறுதிபூண்டார்.