
கோலாலாம்பூர், ஜூன்-23-மலேசியாவில் பாதுகாப்பான, நவீன மற்றும் நிலையான பசுமைச் சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், Panasonic Malaysia நிறுவனம் இரண்டு அதிநவீன தொழில்நுட்பத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
Panasonic S.ICITY Smart Living மற்றும் Panasonic AI Smart Surveillance Ecosystem ஆகியவையே அந்த இரு புதிய தொழில்நுட்பங்களாகும்.
வணிக வளாகங்கள், குடியிருப்புத் திட்டங்கள், அரசு உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த ஒருங்கிணைந்த சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள Smart Home தொழில்நுட்பம் மூலம், ஒரே ஒரு கைப்பேசி செயலியின் வாயிலாக விளக்குகள், குளிரூட்டிகள், பாதுகாப்புப் பூட்டுகள் மற்றும் எரிவாயுக் கசிவு கண்காணிப்பு போன்ற அனைத்தையும் பயனர்கள் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.
அதேவேளையில், புதிய AI கண்காணிப்புத் திட்டமானது, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வீடியோ பகுப்பாய்வு, _face recognition_ எனப்படும் முக அங்கீகாரம் மற்றும் வாகன உரிமத் தட்டுகளைக் கண்டறியும் தொழில்நுட்பங்களைக் கொண்டு பொதுப் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என Panasonic Malaysia-வின் Systems Solution இணை இயக்குநர் சீலன் கந்தசாமி தெரிவித்தார்.
மலேசியாவின் மின்னியல் உருமாற்றம் மற்றும் பசுமைக் கட்டட இலக்குகளுக்கு (ESG) இத்திட்டங்கள் பெருந்துணையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



