
கோலாலம்பூர், மே-5 – மலேசியா எந்தவோர் இனத்திற்கும் பிரத்தியேகச் சொந்தமல்ல; மாறாக அனைத்து குடிமக்களுக்கும் உரித்தானதென, மலேசிய சீனர் சங்கமான MCA கூறியுள்ளது.
இப்போதும் அப்படித்தான், இனி எப்போதும் அப்படித்தான் என, இனம் மற்றும் மதங்களுக்கு இடையிலான உறவு தொடர்பான MCA குழுவின் துணைத் தலைவர் ரோஜர் யாப் கூறினார்.
வெவ்வேறு இனங்களுக்கிடையே நம்பிக்கை, புரிதல் மற்றும் பகிரப்பட்ட இலட்சியங்களின் அடிப்படையிலேயே எதிர்காலமும் அமைய வேண்டும்; மாறாக பயம், வெறுப்பு அல்லது பிரிவினையின் அடிப்படையில் அல்ல என்றார் அவர்.
எனவே, வெறுப்பு அரசியலை நிராகரித்து, பகுத்தறிவு, ஒற்றுமை மற்றும் உண்மையான மலேசியப் பண்புகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளுமாறு அனைத்து மலேசியர்கள், குறிப்பாக இளையத் தலைமுறையினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
“மலாய்க்காரர் அல்லாதோர் தங்கள் மூதாதையர்களின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் படிக்கிறார்கள் என்பது உண்மைதான்; அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இல்லை”
ஆனால், அதற்காக மலேசியாவுக்கு அவர்கள் விசுவாசமாக இல்லையென்று அர்த்தம் கற்பிப்பது முற்றிலும் தவறு என, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
மலாய்க்காரர் அல்லாதோரும் இந்நாட்டு குடிமக்களே என்றாலும், அவர்கள் கைகளுக்கு ஆட்சி போய் விடாமால் பார்த்துக் கொள்வது மலாய்க்கார இளைஞர்களின் கடமையென, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருப்பது குறித்து, ரோஜர் யாப் கருத்துரைத்தார்.
நாட்டின் பிரதமராக இருந்தவர் என்ற வகையில், மக்களிடையே ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு பதிலாக, இது போன்று பிரிவினைவாதத்தையும் வெறுப்புணர்வையும் விதைப்பது, மகாதீருக்கு அழகல்ல என அவர் சாடினார்.