
செர்டாங், மே 8 – மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் மாபெரும் இந்திய போட்டி விளையாட்டான அசுரன் 17 மலேசிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 500 மாணவர்களை ஒன்றிணைத்து கோலாகலமாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை பெரும் ஆரவாரத்தோடு நடைபெற்ற இப்போட்டியை முன்னிட்டு கரகோசமும் வெற்றி முழக்கமும் ஒவ்வொரு UPM மைதானங்களிலும் மண்டபங்களிலும் எதிரொலித்தன.
UPM மாணவர் விவகாரப் பிரிவு மற்றும் மலேசிய கபடி கூட்டமைப்புடன் இணைந்து மலேசிய புத்ரா பல்கலைக்கழக இந்து பேரவையால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. UPM மில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாணவர் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகவும் இது அமைந்தது.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், காற்பந்து மற்றும் கபடி (ஆண்கள் மற்றும் பெண்கள்) என இரண்டு முக்கிய பிரிவுகள் இடம்பெற்றன. காற்பந்து போட்டி A & C காற்பந்து மைதானங்களிலும், அதே நேரத்தில் கபடி மற்றும் நிறைவு விழா இரண்டாம் புத்ரா மண்டபத்திலும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களான பாலகோங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வெய், மற்றும் மலேசிய கபடி கூட்டமைப்பின் தலைவர் TS டாக்டர் பால் செல்வம் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆண்கள் கபடி பிரிவில் மலேசிய துன் உசேய்ன் ஓன் பல்லைக்கழகம் (UTHM), கபடி பெண்கள் பிரிவில் வட மலேசியா பல்கலைக்கழகம் (UUM), காற்பந்து பிரிவில் மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகம் ( UTM ) வெற்றி பெற்றன.
பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே விளையாட்டுத் திறன் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் இப்போட்டி ஒரு வாய்ப்பாக அமைந்தது. வெறும் வெற்றி அல்லது தோல்வியை விட, இந்த நிகழ்வு நட்பை உருவாக்கவும், கலாச்சாரத்தை கொண்டாடவும், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கவும் ஒரு தளமாக அமைந்ததாக மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் இந்து பேரவையின் தலைவர் சந்தோஷ் சுப்பிரமணியம் தெரிவித்தார்.