
கோலாலாம்பூர், மார்ச்-3-மாசி மக திருவிழாவை முன்னிட்டு பத்து மலை முருகன் திருத்தலத்திலிருந்து கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நேற்று பக்திப் பெருக்குடன் இரத ஊர்வலம் நடைபெற்றது.
மாலை 6.50 மணிக்கு புறப்பட்ட 2 இரதங்கள், கொட்டும் மழையிலும் தாய்க் கோவிலுக்கானப் பயணத்தைத் தொடர்ந்தன.
வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்தும், இரதத்தின் முன் தேங்காய் உடைத்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இரவு 9.15 மணி வாக்கில் இரதம் ஜாலான் செந்தூலை அடைந்த போது அங்கு ஏராளமான தண்ணீர் பந்தல்கள் போடப்பட்டிருந்தன.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபகாரனும் சிறப்புத் தண்ணீர் பந்தலை அமைத்திருந்தார்.
தேரோட்டத்தில் பங்கேற்ற தேவஸ்தான அறங்காலவர் டத்தோ என். சிவகுமார், ஊர்வலம் சுமூகமாக நடைபெற்றதாகக் கூறினார்.
அண்மையகக் காலமாக ஆங்காங்கே மத சர்ச்சைகள் எழுந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இதுபோன்ற சமய நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றார் அவர்.
இந்த மாசிமக இரத ஊர்வலம் இன்று அதிகாலை 1.44 மணிக்கு ஆலயத்தை சென்றடைந்தது.



