
கொல்கத்தா, மே-6-மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அம்மாநிலத்தில் இதுவரை நடக்காத ஒன்றாக அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடி உருவாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள போதிலும், முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து நாட்டு மக்களையே அதிர வைத்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் தீர்ப்பை மக்கள் தீர்ப்பாக ஏற்க முடியாது என்றும், இது ஒரு ‘சதி’ என்றும் கடுமையாகச் சாடினார்.
294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்தில் BJP 207 இடங்களைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
ஜெயலலிதாவுக்குப் பிறகு இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண் அரசியல்வாதியாக வலம் வரும் மம்தா பானர்ஜி 15 ஆண்டுகளாக மேற்கு வங்க முதல்வராக உள்ளார்.
ஆனால், அவரின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இம்முறை வெறும் 80 இடங்களுக்குத் தள்ளப்பட்டது; பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார்.
இருப்பினும், தேர்தல் ஆணையம் BJP-யுடன் இணைந்து சுமார் 100 இடங்களைக் ‘கொள்ளையடித்துவிட்டதாக’ மம்தா குற்றம் சாட்டுகிறார்.
பொதுவாகத் தேர்தலில் தோல்வியுற்ற முதலமைச்சர் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பது வழக்கம்.
ஆனால், தாம் ஆளுநர் மாளிகைக்குச் செல்லப் போவதில்லை என்றும், தார்மீக ரீதியாகத் தங்களே வெற்றி பெற்றிருப்பதாகவும் மம்தா அறிவித்துள்ளார்.
மேலும், முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மே 9-ஆம் தேதி BJP புதிய அரசை அமைக்கத் தயாராகி வரும் நிலையில், மம்தாவின் இந்த பிடிவாதம் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.



