
கோலாலம்பூர், ஜூன்-20 – வரவிருக்கும் 16-ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய இந்திய வாக்காளர்கள் ‘கிங்மேக்கர்’ எனும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பர் என, பிரபல சமூக-அரசியல் ஆய்வாளர் டத்தோ எம். பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த வாக்காளர்களில் இந்தியர்கள் 7.2 விழுக்காடு மட்டுமே என்றபோதிலும், பல இழுபறித் தொகுதிகளின் வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர்களே விளங்குகிறார்கள்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், அடித்தட்டு மக்களிடையே வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் அண்மையக் கோவில் விவகாரங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
கட்டமைப்பு ரீதியாக இன்னமும் ம.இ.கா வலுவாக இருக்கும் வேளையில், ‘நச்சு’ அரசியல் கலாச்சாரத்தால் இளைய தலைமுறையினர் அரசியலில் சலிப்படைந்துள்ளனர்.
இதனால் இம்முறை வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளதால், தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட கூட்டணியே வெல்லும் என பெரியசாமி கூறுகிறார்.
நம்பிக்கைகளுக்கும் கவலைகளுக்கும் இடையில் நிற்கும் இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெற, வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு அரசு தரும் தீர்வே தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் என்றார் அவர்.



