
கோலாலம்பூர், ஆக. 7 – இணையவழி உணவு சேவை மூலம் ஆர்டர் செய்யப்பட்ட நாசி கோரெங் கம்புங்கில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, உணவுப் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அந்த வீடியோவைப் பகிர்ந்த மலேசியப் பெண், உணவை சாப்பிடத் தயாரானபோது அதில் சிறிய புழுக்கள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனால், அந்த உணவை சாப்பிட முடியாமல் போனதுடன், இந்த அனுபவம் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் எந்த உணவகத்தில் அல்லது எந்தப் பகுதியில் நடந்தது என்பது குறித்து அவர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. சம்பந்தப்பட்ட உணவகம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் உணவு தயாரிப்பு, சேமிப்பு மற்றும் விநியோகத்தில் சுகாதாரத் தரநிலைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை, சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் அல்லது அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை எந்தவொரு உணவகத்தையும் குற்றம்சாட்டக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளதுடன், இணையவழியில் உணவு ஆர்டர் செய்யும் நுகர்வோரும் உணவை உட்கொள்வதற்கு முன் கவனமாகப் பரிசோதிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.



