
ஜோகூர் பாரு, ஏப் 2 – திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட போதைப்பொருள் கும்பலின் ஏழு உறுப்பினர்களை போலீஸ் அதிகாரிகள் கைது செய்ததோடு , 1.24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
அந்த சந்தேக நபர்கள் அனைவரும் 31 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து குழுவை வழிநடத்திய ஒரு உள்ளூர்வாசியும் அடங்குவதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்ஷாத் ( Ab Rahaman Arshad ) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இதர ஆறு நபர்கள், வாடிக்கையாளர்களைத் தேடுவது மற்றும் போதைப்பொருட்களைப் பொட்டலமிடும் நடவடிக்கைகள் மூலம் அந்தக் கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
இந்தக் கும்பலுக்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் இருப்பதுடன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், குறிப்பாக பொழுதுபோக்கு மையங்களில், நகரம் முழுவதும் தீவிரமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.
சந்தேக நபர்கள் அனைவரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரை ஏழு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்களிடமிருந்து பல்வேறு வகையான போதைப் பொருட்கள் , போதை மாத்திரைகள் , ஒரு பெரோடுவா அல்சா, ஓர் இனோகோம் சாண்டா கார் , ஒரு ஹோண்டா வாரியோ மோட்டார் சைக்கிள் உட்பட ரொக்கத் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டன.



