
சென்னை, ஜூன்-24,போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி பிரபல நடிகர் ஸ்ரீ காந்த் கைது செய்யப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்.
‘ஏப்ரல் மாதத்தில்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் வாயிலாக கனவு நாயகனாக இவர் வலம் வந்தார்.பின்னர் பட வாய்ப்புகள் குறைந்தவர், தற்போது ‘தீங்கரை’ என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தின் தயாரிப்பாளர் பிரசாத் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் ஸ்ரீ காந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
குறிப்பாக சென்னையில் உள்ள கேளிக்கை மையங்களில் ஸ்ரீ காந்த் போதைப்பொருளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஸ்ரீ காந்தின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சோதனை நடத்தப்படதில் அவர் ‘கொக்கைன்’ போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவர் அதனை உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்பாக அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
கீழ்ப்பாகம் மருத்துவமனைக்கு போலீஸ் வேனில் அவர் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளன.
இந்த போதைப்பொருள் வழக்கில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? திரையுலகைச் சேர்ந்தவர்கள் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.