
சுங்கைப் பட்டாணி, நவ 11- சுங்கைப் பட்டாணி மாவட்டத்தில் ஜாலான் கம்போங் பாருவில் வெளிநாட்டினருக்கான கரோக்கே பொழுதுபோக்கு மையமாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வணிகக் கட்டிட வளாகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மணி 11.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 14 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஹன்யன் ரம்லான் ( Hanyan Ramlan ) தெரிவித்தார்.
வெளிநாட்டினர் மட்டுமே வருகை தந்த கரோக்கே மையம், இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட போதிலும் பின்னர் அந்த மையம் மீண்டும் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் முகப்பிட உதவியாளராக பணியாற்றிய 28 வயதுடைய ஆடவருடன் 20 வயதுடைய இரண்டு பெண் தொழிலாளர்களும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் 20 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாவர்.
விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



