
ஷா ஆலாம், மே-9-சிலாங்கூர், ஷா ஆலாமில் சட்டவிரோதமாக குப்பைக் கொட்டிய இருவர், ஷா ஆலாம் மாநகர மன்றம் MBSA அமைத்திருந்த CCTV கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் கோத்தா கெமுனிங் பகுதியில் உள்ள Jalan Batu Bata அருகே நிகழ்ந்தது.
ஒரு Proton Gen 2 காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு, அதிலிருந்து குப்பைகள் அடங்கிய கருப்பு பிளாஸ்டிக் மூட்டைகளை இருவர் இறக்கி சாலையோரத்தில் கொட்டும் காட்சி CCTV-யில் பதிவாகியுள்ளது.
அப்போது, “மீண்டும் சொல்கிறோம். இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்” என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களின் செயல் முழுமையாகப் பதிவுச் செய்யப்பட்டது.
உடனடியாக குப்பைகளை மீண்டும் எடுத்துச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ச்சியான எச்சரிக்கைக்கு பிறகு, அந்த இருவரும் குப்பைகளை மீண்டும் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பொது மக்கள் பலரும் MBSA எடுத்த நடவடிக்கையை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், பொது இடங்களில் தூய்மையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும், CCTV கண்காணிப்பும் கடுமையான அமுலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



