
கோலாலாம்பூர், ஜூன்-12 – பேருந்து ஓட்டுநர்களுக்கு போதைப்பொருள் சோதனைக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அதுவும், அன்றைய நாளுக்கான பயணங்களைத் தொடங்கும் முன்னர் அச்சோதனை நடத்தப்பட வேண்டும்.
பேராக், கெரிக்கில் UPSI மாணவர்கள் 15 பேரது உயிர்களை பலிகொண்ட பேருந்து விபத்தை அடுத்து, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
சோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானால், அவர்கள் பேருந்தை எடுக்க அனுமதிக்கக் கூடாது; அதோடு சம்பளமும் பிடித்தம் செய்யப்பட வேண்டுமென்றார் அவர்.
ஒருவேளை சோதனைக்கு உட்பட மறுத்தால், இனி பேருந்து ஓட்ட அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் மகாதீர் யோசனைக் கூறினார்.
ஏராளமான பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தக்கூடும் என்ற நீண்டகாலமாகவே கவலைகள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இது பயணிகளுக்கும் பிற சாலைப் பயனர்களுக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என, இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் மகாதீர் கூறினார்.
திரங்கானு, ஜெர்த்தேவிலிருந்து பேராக், தஞ்சோங் மாலிமில் உள்ள UPSI campus வளாகத்திற்குத் திரும்பும் வழியில் திங்கட்கிழமை இரவு அப்பேருந்து விபத்துக்குள்ளானதில், 15 மாணவர்கள் உயிரிழந்த வேளை, பேருந்து ஓட்டுநர் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.