
ஹைதராபாத், அக்டோபர்-5,
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இந்திய மாணவர் சந்திரசேகர் போல் (Chandrashekar Pole) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
அவர் பணிபுரியும் பெட்ரோல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் அவரைச் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது.
2023-ஆம் ஆண்டு உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற சந்திரசேகர், 6 மாதங்களுக்கு முன் தனது முதுகலைப் படிப்பை முடித்து முழுநேர வேலையைத் தேடிக்கொண்டிருந்தார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த பெட்ரோல் நிலையத்தில் அவர் பகுதிநேரமாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகம் சந்திரசேகர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்து உரிய உதவிகளை வழங்கி வருவதோடு, உள்ளூர் போலீஸாரின் விசாரணைக்கும் ஒத்துழைத்து வருகிறது.
இவ்வேளையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், சந்திரசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.
இச்சம்பவம், அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் குறிப்பாக பகுதி நேர வேலை செய்து வருபவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.