கோலாலம்பூர், ஜன 12 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட துபாய் சதித்திட்டம் தொடர்பில் நேற்று 13 புகார்களை போலீசார் பெற்றனர். தற்போது இந்த புகார்கள் குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக மூன்று சமூக வலைத்தலைவாசிகளான “செகுபார்ட்” எனப்படும் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், பாப்பாகோமோ எனப்படும் வான் அஸ்ரி வான் டெரிஸ், சலீம் இஸ்கண்டார் ஆகியோர் அழைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறியிருந்தார். துபாய் சதித்திட்டம் தொடர்பில் ஜனவரி 9ஆம் தேதி வரை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நாடு முழுவதிலும் 43 புகார்களை செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.