ஜொகூர் பாரு, மார்ச்-20 ஜொகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனையின் ( HSAJB )அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு தாமதமாகக சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுவதை, அம்மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
அக்குற்றச்சாட்டு தனியார் டிவிட்டர் பக்கமொன்றில் மார்ச் 16-ஆம் தேதி பதிவேற்றப்பட்டிருந்தது.
அதாவது HSAJB யின் அவசர சிகிச்சைப் பிரிவில் தாம் அலைக்கழிக்கப்பட்டு தமக்கு தாமதமாக சிகிச்சையளிக்கப்பட்டதாக அந்நபர் குற்றம் சாட்டியிருந்தார்.
அது உடனடியாக வைரலாகவே, வழக்கம் போல நெட்டின்சன்கள் மத்தியில் ‘கொந்தளிப்பை’ ஏற்படுத்தியது.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் இந்த தன்னிலை விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அக்குற்றச்சாட்டு குறித்து தாங்கள் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆனால் அந்நபர் கூறியவை உண்மையில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் மருத்துவமனையின் இயக்குநர் சொன்னார்.
இரவு 10.33 மணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் பதிவுச் செய்யப்பட்டவருக்கு, 10.45 மணி தொடக்கம் உரிய சேவை வழங்கப்பட்டு, அது மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்திருப்பதையும் அவ்வறிக்கையில் அவர் சுட்டிக் காட்டினார்.
இது போன்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அவர், சிகிச்சைப் பெற வரும் பொது மக்களுக்கு எல்லா நேரங்களிலும் மிகச் சிறந்த சேவையை வழங்கி வரும் கடப்பாட்டில் இருந்து தாங்கள் ஒரு போதும் விலகியதில்லை என்றார்.