
ஜோகூர் பாரு, ஏப் 22 – பாசிர் கூடாங்கில் நடந்ததாகக் கருதப்படும் ஒரு சம்பவத்தில் ஒரு கும்பலால் இளைஞன் தாக்கப்படுவதைக் காட்டும் பல வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த காணொளியில், பாதிக்கப்பட்டவர் பலவீனமாகத் தோன்றுவதையும், எதிர்க்காமல் இருப்பதையும், ஐந்து முதல் ஏழு நபர்கள் அந்த இளைஞரை மீண்டும் மீண்டும் தாக்குவதையும் அந்த காணொளியில் காணமுடிந்தது.
பதின்ம வயதினரைக் கொண்ட ஒரு குழுவினர் தங்கள் கைகளையும் கால்களையும் பயன்படுத்தி, முகம், மார்பு மற்றும் உடலின் பிற பகுதிகளில் அந்த இளைஞரை குத்துகின்றனர் .
பாதிக்கப்பட்ட நபரின் அந்தரங்க உறுப்பை சம்பந்தப்பட்ட குழுவினர் தாக்கி உதைப்பதை காட்டும் காட்சியையும் அந்த காணொளியில் காணமுடிவதாக கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் தளர்ந்த நிலையில் வலியால் போராடிக் கொண்டிருந்ததோடு அவரது மூக்கிலும் இரத்தம் வழிந்தது. இந்த சம்பவம் இணையவாசிகளிடமிருந்து கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளதோடு, குண்டர்கள் போல் நடந்துகொண்ட அந்த கும்பலின் உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
பாதிக்கப்பட்டவருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது