
கோலாலாம்பூர், மே-14 – மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில், மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் எடுத்துவரும் முன்னெடுப்புகள் சமூக ஆர்வலர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ரமணனின் முயற்சியில் பிரதமர் முன்னிலையில் மித்ரா அமைப்புக்கான நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, 3,000 இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினிகளும், 4,165 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 8.3 மில்லியன் ரிங்கிட்டுற்கும் அதிகமான இந்த நிதி உதவி, இந்திய மாணவர்களின் கல்விப் பயணத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
மேலும், சுங்கை பூலோ தொகுதியில் SPM தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற 934 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதோடு, இளைஞர்களுக்காக 10,000 இலவச சைக்கிள்களை வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மனிதவள அமைச்சர் என்ற முறையில், PERKESO எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு புதிய முன்னெடுப்புகளையும் அவர் அறிமுகப்படுத்தி வருகிறார்.
தவிர, எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செமிகண்டக்டர் மற்றும் AI துறைகளில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏதுவாக MIMOS Berhad அமைப்புடன் இணைந்து அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகள், நாட்டின் மனிதவள மேம்பாட்டில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
“ஒரு குழுவாக உழைப்போம், ஒரு குடும்பமாக வெற்றி பெறுவோம்” என்ற உணர்வு, மலேசிய மக்களின் ஒற்றுமை, நலன் மற்றும் எதிர்காலத்திற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகப் பிரதிபலிப்பதாக, சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.



