
ஷா ஆலாம், மே-17,
நாடு முழுவதும் 600,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில், தெக்குன் நேஷனல் கடனுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 10.3 பில்லியன் ரிங்கிட் நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது, 1998-ஆம் ஆண்டு தெக்குன் நேஷனல் அமைக்கப்பட்டதிலிருந்து இவ்வாண்டு வரைக்குமான நிதி ஒதுக்கீடு என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
குறு சிறு நடுத்தர வியாபாரிகளின் முன்னேற்றத்திற்காக அந்நிதி வழங்கப்பட்டது.
இவ்வாண்டு மட்டுமே இதுவரையில் 252 மில்லியன் ரிங்கிட் கடனுதவி 11,698 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோருக்கு உகந்தச் சூழலை அதுவும் நீடித்த பொருளியல் சூழலை ஏற்படுத்தும் கடப்பாடு தொடருமென்றார் அவர்.
சிலாங்கூர், ஷா ஆலாமில் தொழில்முனைவோருக்கான தெக்குன் நேஷனலின் அடிப்படைப் பயிற்சிப் பட்டறையை தொடக்கி வைத்து உரையாற்றுகையில், டத்தோ ஸ்ரீ ரமணன் அவ்வாறு கூறினார்.
குறு சிறு நடுத்தர வியாபாரிகளுக்கு தெக்குன் நேஷனல் வழங்கும் பல்வேறு கடனுதவி வாய்ப்புகள் குறித்த தகவல்கள், அடிப்படை தொழில்முனைவோர் பயிற்சி உள்ளிட்டவை அதில் வழங்கப்பட்டன.
பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்முனைவோர்கள் அப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றனர்.
அக்கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் சிலர் தாங்கள் அடைந்த நன்மையை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
EIP எனும் இந்தியத் தொழில்முனைவோரின் கரங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் சிலாங்கூர் கோலாலம்பூர் தொடங்கி, நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுமென்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.