
கோலாலம்பூர், ஜூன்-15,
இந்தியாவின் நிர்வாக மற்றும் தலைமைத்துவக் கழகமான IIGL-லின் ஆசியாவுக்கான கௌரவ இயக்குநராக, மலேசியாவைச் சேர்ந்த சிறந்த இளம் தலைவரும் சமூக ஆலோசகருமான
எஸ். பத்ம சீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது மலேசியாவுக்கு குறிப்பாக இந்தியர்களுக்குக் கிடைத்த கௌரவம் என, இந்திய வம்சாவளியினருக்கான உலக அமைப்பான கோபியோவின் மலேசியக் கிளை பாராட்டியுள்ளது.
இந்நியமனம், Confederation of Young Leaders of India தலைமையிலான ஒருங்கிணைப்பின் கீழ் வழங்கப்பட்டதாகும்.
இது சீலனின் ஆற்றல்மிக்க கட்டமைப்பு, இடைவெளி கடந்து இளைஞர்கள் முன்னேற்றத்தில் அளித்த முக்கிய பங்களிப்புகள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்திய முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
ஆசிய இயக்குநராக, அவர் நல்ல நிர்வாகத்தையும், கல்வித் துறையில் சிறந்த முன்னேற்றமும், மக்களிடையே கலந்துரையாடலையும் தூண்டும் பணியில் முக்கிய பங்கு வகிப்பார்.
தற்போது மலேசிய அனைத்துலக இளைஞர் மையத்தின் துணை இயக்குநராகவும், மலேசியா-இந்தியா வம்சாவளி சங்கத்தின் (MYIDA) தலைவராகவும், GOPIO International இளையோர் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள சீலன், பல தேசிய மற்றும் அனைத்துலக மேடைகளில் இளைஞர்களின் திறன் வளர்ச்சி, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் சமூக சேவையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இது மாதிரியான ஒரு மலேசிய இந்தியரின் சாதனையை GOPIO மலேசியா பெருமையுடன் பதிவுச் செய்வதாக, அதன் பொதுச் செயலாளர் ரவீந்திரன் அர்ஜுனன் தெரிவித்தார்.
சீலனின் இந்த நியமனம், அவரின் தனிப்பட்ட சிறப்பை மட்டுமல்லாது, உலகத் தலைமையிலும் இந்திய வம்சாவளி உறவுகளுடனான மலேசியாவின் பங்களிப்பையும் உணர்த்துகிறது