சிங்கப்பூரில் இன்று நிறைவேற்றவிருந்த தட்சிணாமூர்த்தியின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு

சிங்கப்பூர், செப்டம்பர்-25,
மலேசியரான கே. தட்சிணாமூர்த்திக்கு இன்று காலை சாங்கி சிறைச்சாலையில் நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Lawyers of Liberty அமைப்பின் ஆலோசகர் வழக்கறிஞர் என். சுரேந்திரன் அதனைத் தெரிவித்தார்.
அம்முடிவு குறித்து தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினருக்கு நள்ளிரவுக்குப் பிறகு சிறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
ஆனால் கூடுதல் விவரங்கள் எதுவும் தரப்படவில்லை என்றார் அவர்.
2011-ஆம் ஆண்டு 44.96 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிங்கையில் கைதுச் செய்யப்பட்ட தட்சிணாமூர்த்திக்கு, 2015-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2022-ல் அவர் சிங்கப்பூர் அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு தொடுத்ததால், தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது சிங்கப்பூரில் மரண தண்டனைக்குக் காத்திருக்கும் மலேசியர்கள் நால்வரில் இவரும் ஒருவராகும்.
மற்றவர்கள் பி. பன்னீர் செல்வம், எஸ். சாமிநாதன் மற்றும் ஆர். லிங்கேஸ்வரன் ஆவர்.
இவர்களின் உயிரைக் காப்பாற்ற மலேசிய மனித உரிமை ஆணையம் அண்மையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.