Latestமலேசியா

இந்நாடு மலாய்க்காரர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமே உரித்தானது அல்ல – நஸ்ரி அசிஸ்

கோலாலம்பூர், மார்ச்-6 – இந்த நாடு மலாய்க்காரர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மட்டும் சொந்தமல்ல.

மாறாக, பல்லின மற்றும் பல்வேறு மதங்களைப் பிரதிநிதிக்கும் பூமி என, அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசிஸ் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் சபா-சரவாக் மக்களை நாம் பாராட்டியாக வேண்டும்;

அவர்கள் மலேசிய அடையாளத்தின் வலுவான உணர்வைக் கொண்டுள்ளதாக நஸ்ரி சொன்னார்.

சபா – சரவாக் மக்கள், தத்தம் மாநிலங்களை மலேசியர்களாகவே நடத்துகிறார்கள்; தங்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மலேசியர்களாகவே ஒன்றாக வாழ்கிறார்கள்.

ஆனால், இதற்கு நேர்மாறாக, தீபகற்பத்தில் உள்ள பல மலாய்க்காரர்கள் தேசியத்தை விட இனத்தை முன்னுரிமைப்படுத்த முனைகின்றனர்.

அரசியல் ஆதாயம் என வசதிப்படும் போது மட்டுமே அவர்கள் தங்களை மலேசியர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்; தேர்தல்களில் மலாய்க்காரர் அல்லாத வாக்குகளைப் பெறும் போது இதனை அப்பட்டமாகக் காணலாம்; இவர்கள் உண்மையில் “போலி மலேசியர்கள்” என நஸ்ரி சாடினார்.

“அனைத்துலக அரங்கில் மலேசியாவின் முகவரியாகத் திகழ்ந்த தேசிய விளையாட்டு ஜாம்பவான்கள் டத்தோ நிக்கோல் டேவிட் மற்றும் டத்தோ லீ சோங் வெய் ஆகியோர் தங்களை இந்தியர்களாகவோ சீனர்களாகவோ அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை; மாறாக மலேசியாவுக்கே விளையாடினர்,” என நஸ்ரி கூறினார்.

நாட்டின் அரசியல் திசை மற்றும் அரசியலில் இஸ்லாத்தின் தாக்கம் வளர்ந்து வருவது குறித்து FMT கேட்ட போது அந்த அம்னோ மூத்தத் தலைவர் அவாறு சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!