
இல்லாத முதலீடு திட்டத்தை நம்பி தனியார் ஊழியர் ரி.ம 600,000 இழந்தார்.
குவந்தான், பிப்ரவரி-19,
தனியார் துறை ஊழியர் ஒருவர் இணையம் வாயிலாக இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி அதில் முதலீடு செய்ததைத் தொடர்ந்து 6 லட்சம் ரிங்கிட்டிற்கு மேலாக இழந்தார்.
57 வயதுதான அந்த ஆடவர் சந்தேகப் பேர்வழி ஒருவர் தெரிவித்த WhatsApp வழியாக வழங்கப்பட்ட இணைப்பு மூலம் `BM-max’ எனப்படும் முதலீட்டு விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து ஜனவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை மொத்தம் 636,123 ரிங்கிட் மதிப்பிலான நான்கு முறை பணப் பட்டுவாடாக்களை செய்துள்ளார்.
இதற்காக தனக்கு 30 விழுக்காடு லாபம் கிடைக்கும் என அந்த ஊழியருக்கு வாக்குறுதியும் வழங்கப்பட்டது. எனினும் இது குறித்து எந்தவொரு பணமும் கிடைக்காததால் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து பாதிக்கப்பட்டவர் குவந்தான் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.
இச்சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முன்பின் அறிமுகம் இல்லதவர்களை நம்பி எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்ய வேண்டாமென பஹாங் மாநில போலீஸ் தலைவர் டத்தேஸ்ரீ யஹ்யா ஒத்மான் கேட்டுக்கொண்டார்.



