Latestஉலகம்

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட் தோல்வி; ஆராய குழு அமைப்பு

சென்னை, மே-19 – இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் நேற்று அதிகாலை விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் தோல்வியடைந்தது.

ராக்கெட்டில் 1,696.24 கிலோ கிராம் எடையில் அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த செயற்கைக்கோள், இரவு பகல் நேரங்களில் கூட மிகவும் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது.

இந்தியா-பாகிஸ்தான் இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், சில முக்கிய தகவல்களை இந்த செயற்கைக்கோள் வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் அது ஏவப்பட்டது.

இந்நிலையில், திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த முயற்சித்தது; ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தோல்வியில் முடிந்தது.

செயற்கோளை விண்ணில் ஏவி நிலை நிறுத்துவதில் 4 நிலைகள் உள்ளன; நான்கும் வேலை செய்தால் தான், அதை விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்த முடியும்.

முதலிரண்டு நிலைகளும் சிறப்பாக இயங்கிய வேளை மூன்றாவது நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ராக்கெட் தோல்வியடைந்தது.

ராக்கெட்டின் அத்தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டிருப்பதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து, அடுத்த ராக்கெட்டில், இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்றார் அவர்.

ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது வருத்தமளித்தாலும், ஒவ்வொரு மாதமும், ஒரு ராக்கெட் வீதம், இன்னும், 13 ராக்கெட்டுகளை தொடர்ச்சியாக விண்ணில் செலுத்த உள்ளோம் என நாரயணன் நம்பிக்கையுடன் கூறினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!