இஸ்லாமியர் என்ற அடையாளத்தை இரத்து செய்யும் ஆடவர் தொடுத்த வழக்கை இரத்துச் செய்ய அரசு & MAIWPயின் மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கோலாலம்பூர், அக்டோபர்-24,
29 வயது Shehzad Malik Muhammad Sarwar Malik என்பவர் தாக்கல் செய்த வழக்கை இரத்துச் செய்யக் கோரி மலேசிய அரசாங்கம் மற்றும் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய மன்றமான MAIWP தாக்கல் செய்த மனுவை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
Shehzad, தான் ஒருபோதும் இஸ்லாத்தை பின்பற்றவில்லை அல்லது மதம் மாறவில்லை என்றும், மாறாக சிறுவயதிலிருந்தே சீக்கியராக இருந்ததாகவும் அறிவிக்கக் கோரியுள்ளார்.
எனினும், இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது தொடர்பான பிரச்னையுடன் தொடர்புடையது என்பதால், இவ்வழக்கு ஷரியா நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இருந்திருக்க வேண்டும் என்று அரசாங்கமும் MAIWP-யும் வாதிட்டன.
இருப்பினும், நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்து, வழக்கு சிவில் நீதிமன்றத்தில் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பு, சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்களின் அதிகார வரம்பு, குறிப்பாக மத அந்தஸ்து சம்பந்தப்பட்ட வழக்குகள் மீதான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
எதிர்காலத்தில் இதே போன்ற வழக்குகளுக்கு, இந்த முடிவை ஒரு முக்கியமான முன்னுதாரணமாக சட்ட பார்வையாளர்கள் வருணித்துள்ளனர்.



