
கோலாலம்பூர், மார்ச்-4-இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்த சிறப்பு பதிவாளரை (Pendaftar Khas) நியமிக்கும் திட்டத்தை, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் மேலவையில் அதனைத் தெரிவித்தார்.
இம்முயற்சி முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வு காண உதவும்.
ஆனால் ஆலயங்கள் மற்றும் நில விவகாரங்கள் மாநில அரசுகளின் அதிகார வரம்பில் இருப்பதால், கூட்டரசு அரசியலமைப்பை கருத்தில் கொண்டு ஆலோசனை மற்றும் நல்லிணக்க அணுகுமுறையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
இது தவிர, இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களின் விவகாரங்களை ஒருங்கிணைக்க சரவாக்கில் UNIFOR, சிலாங்கூரில் LIMAS போன்று பல மாநிலங்களில் சிறப்பு குழுக்கள் செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதுவே மத்திய அரசாங்கத் தரப்பில், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் e-RIBI முறையின் மூலம் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிதி மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அதோடு, 1976-ஆம் ஆண்டு ஊராட்சித் துறை சட்டம், 1974-ஆம் ஆண்டு சாலை-கால்வாய்-கட்டடங்கள் சட்டம் மற்றும் 1976-ஆம் ஆண்டு நகர-கிராம திட்டமிடல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தேவாலயம், பள்ளிவாசல், கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் கட்டுமானம் அல்லது புதுப்பிப்புக்கு திட்டமிடல் அனுமதி பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், 25 மதத் தலைவர்களை கொண்ட தேசிய மத நல்லிணக்கக் குழு மதங்களுக்கு இடையிலான புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிப்பதாகவும் யுனேஸ்வரன் கூறினார்.



