
கோலாலம்பூர், மே-9- மலேசிய – அமெரிக்க வாணிப பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முடிவுகளை கொண்டு வரலாம்.
ஆனால் அமெரிக்காவின் 10% அடிப்படை இறக்குமதி வரி நீடிக்குமென்றே எதிர்பார்கப்படுவதாக, MITI எனப்படும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் மூத்த அதிகாரி ரவீந்திரன் நாயர் கூறினார்.
அப்பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டன் சென்ற MITI குழுவில் அவரும் இடம் பெற்றிருந்தார்.
பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும், அனைத்து நாடுகளுக்கும் அந்த 10 விழுக்காட்டு வரி நீடிக்கும் என, அமெரிக்க வாணிப அமைச்சர் Howard Lutnick கூறியதாக ரவீந்திரன் சொன்னார்.
என்றாலும், பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்கா கூடுதலாக அறிவித்த 14 விழுக்காடு வரியைக் குறைப்பது பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
கோலாலம்பூரில் Hong Leong Bank நடத்திய ஆய்வரங்கில் கலந்துகொண்டு பேசிய போது அவர் அதனைத் தெரிவித்தார்.
ஆனால், இரகசியக் காப்புப் காரணமாக, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்த முழு விவரங்கள் குறித்து ரவீந்திரன் விரிவாக வெளியிடவில்லை.
ஏப்ரல் தொடக்கத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி என்ற பெயரில் கூடுதல் வரியை அறிவித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மலேசியாவுக்கு 24 விழுக்காட்டை அறிவித்தார்.
பேச்சுவார்த்தைகளுக்கு வழி விடுவதற்காக பிறகு அதனை 3 மாதங்களுக்கு அவர் ஒத்தி வைத்தார்.
இதைத் தொடர்ந்தே அமைச்சர் தெங்கு டத்தோ ஃசாவ்ருல் தலைமையில் MITI அதிகாரிகள் அண்மையில் அமெரிக்கா பயணமாகினர்