
கோலாலாம்பூர், ஏப்ரல்-7-மலேசியாவில் எண்ணெய் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம் தற்போதைக்கு இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி நிலைமைக் காரணமாக எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றாலும், நாட்டின் மொத்த விநியோகம் இன்னமும் நிலையாக இருப்பதாக அவர் கூறினார்.
தவிர, எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் மலேசியா கொண்டுள்ள வலுவான உறவுகளும், பெட்ரோனாஸ் நிறுவனத்தின் செயல்திறனும், நாட்டின் தேவைகளை பூர்த்திச் செய்ய உதவுவதாக அவர் தெரிவித்தார்.
என்ற போதிலும், உலகளாவியக் காரணங்களால் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் சாத்தியத்தை அன்வார் மறுக்கவில்லை.
இந்நிலையில் தான், முன்னெச்சரிக்கையாக எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளாக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டங்கள் உள்ளிட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.
இன்று நடைபெற்ற கோலாலாம்பூர் – அங்காரா கலந்துரையாடலில் கேள்வி நேரத்தின் போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.



