
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பெர்சாத்துவில் இருந்து நீக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக நீடிக்க, தனது 43 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகக் கூறப்படுவதை பாஸ் கட்சி மறுத்துள்ளது.
அப்பதவியை இனி எடுத்துக் கொள்ளப்போவதாக பாஸ் கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டதாக, அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
ஹம்சாவுக்கு பதிலாக பாஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் புதிய எதிர்கட்சித் தலைவர் ஆவார்.
மக்களவை வரும் ஜூன் மாதம் மீண்டும் கூடும் முன்பாக அவர் அறிவிக்கப்படுவார் என, துவான் இப்ராஹிம் சொன்னார்.
எதிர்கட்சியைச் சேர்ந்த 69 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஹம்சாவே எதிர்கட்சித் தலைவராக தொடர விரும்புவதாக, பெர்சாத்துவின் தானா மேரா எம்.பி Ikmal Hisham Abdul Aziz முன்னதாகக் கூறியிருந்தார்.
அவர்களில் பாஸ் கட்சியின் எம்.பிகளும், பெர்சாத்துவின் 19 எம்.பிகளில் 13 பேரும் அடங்குவர் என அவர் கூறிக் கொண்டார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு தற்போது பாஸ் தலைமையேற்றிருக்கும் நிலையில், மார்ச் மாத இறுதியில் அதன் சார்பில் புதிய எதிர்கட்சித் தலைவர் நியமிக்கப்படுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



