Latestமலேசியா

கடும் கண்டனங்களின் எதிரொலி; உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என பாஸ் கட்சி எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன்-26 – தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் மற்றும் ஒற்றுமையின்மையை தூண்டும் உறுப்பினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாஸ் கட்சி எச்சரித்துள்ளது.

புதிதாக பதவி உயர்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜோனி லிம் குறித்து பாஸ் கட்சியின் தொகுதித் தலைவர் ஒருவர் சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவை வைத்திருப்பது, கட்சியின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது என்று பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் கூறினார்.

லிம்மின் பதவி உயர்வு அவரை 3 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற முதல் மூத்த மலேசிய சீன அதிகாரியாக ஆக்கியுள்ளது; இந்த நியமனம் அனைத்து மலேசியர்களாலும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு என தாக்கியுடின் வருணித்தார்.

பன்முகத்தன்மை மற்றும் பின்புலங்களில் உள்ள வேறுபாடுகள் சமூகத்தின் எந்தவோர் உறுப்பினரையும் நியாயமற்ற முறையில் நடத்துவதற்கான காரணமாகவோ அல்லது நியாயப்படுத்தவோ ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது என அறிக்கையொன்றில் அவர் கூறினார்.

எந்தவொரு வடிவத்திலும் நிறவெறி அல்லது இனவெறிக்கு பாஸ் கட்சியில் இடமில்லை என்றார் அவர்.

ஜெனரல் லிம்மின் நியமனத்தை இனவாதமாக்கி அதனை மறைமுகமாக கேலி செய்யும் விதமாக, இன்னும் 30, 40 ஆண்டுகளில் மலேசியா தனது முதல் சீன வம்சாவளி பிரதமரைப் பெறக்கூடுமென, சுங்கை பூலோ பாஸ் தொகுதித் தலைவரான சஹாருடின் மொஹமட் முன்னதாக சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

இதற்கு சீன சமூகத் தலைவர்கள் முதற்கொண்டு கடும் கண்டனங்கள் எழுந்தன.

லெப்டினன்ட் ஜெனரலாக ஜோனி லிம் பதவி உயர்வுப் பெற்றதானது, மலேசிய இராணுவச் சேவை அனைத்து மக்களுக்குமானது என்பதை நிரூப்பித்திருப்பதாக, ஆயுதப்படைத் தலைமைத் தளபதி முன்னதாக வருணித்திருந்தார்.

சேவை மனப்பான்மையும் கடப்பாடுமே இராணுவச் சேவையில் பதவி உயர்வுக்கான அடிப்படைத் தகுதிகள் என்றும் அவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!