
கண்ட இடங்களில் குப்பைகள் வீசுவதற்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் ஐவர் சமூக சேவையை தொடங்கினர்
ஜோகூர் பாரு, பிப்ரவரி 13-
புதிதாக அமல்படுத்தப்பட்ட கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதற்கு எதிரானச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த ஐவர் நாட்டில் சமூக சேவையை மேற்கொள்ளும் முதல் நபர்களாக விளங்குகின்றனர்.
திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மைச் சட்டம் 2007 இன் பிரிவு 77A அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குப்பை கொட்டிய 89 பேரில் அந்த ஐவரும் அடங்குவர் என ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் ( Ling Tian Soon) தெரிவித்தார்.
அந்த ஐவரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று சமூக சேவையைத் தொடங்கினர். மற்ற வழக்குகளுக்கான விசாரணைகள் இன்னும் நடந்து வருவதால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மற்றவர்கள் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என லிங் கூறினார்.



