
கோத்தா பாரு, ஏப்ரல்-9-கிளந்தானில் அண்மையில் வைரலான ‘அழுகைப் போட்டி’ இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘Serambi Mekah’ என அழைக்கப்படும் அம்மாநிலத்தின் புகழுக்கு இது இழுக்கு என சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என, கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ Dr Mohamed Fadzli Hassan கூறியுள்ளார்.
சட்டதிட்டங்களுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் உட்பட்டிருக்கும் வரை, இதுபோன்ற நடவடிக்கைகளுக்குத் தடையில்லை என்றார் அவர்.
“ஒரு போட்டி பங்கேற்பாளர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வரையில் இஸ்லாமிய சட்டப்படி அதில் தவறில்லை” என்ற கிளந்தான் முஃப்தியின் கருத்தை அவர் ஆமோதித்தார்.
இருப்பினும், இத்தகையப் போட்டிகள் எல்லை மீறிச் செல்லக்கூடாது என்றும், தனிநபர் மற்றும் மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமையக்கூடாது என்றும் துணை மந்திரி பெசார் எச்சரித்தார்.
கிளந்தான் மக்களின் தனித்துவமான படைப்பாற்றல் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கோத்தா பாருவில் உள்ள RTC Tunjung-கில் நடைபெற்ற இந்தப் போட்டி, பங்கேற்பாளர்களுக்குப் பரிசுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நோக்கிலேயே நடத்தப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



