
கிள்ளான், அக்டோபர் 12,
கிள்ளான் லிட்டில் இந்தியா பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தீபாவளி walk-about நிகழ்வில் வணிகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு பண்டிகை குதூகலத்தைப் பகிர்ந்தனர்.
பி.கே.ஆர் துணைத் தலைவர் நுருல் இசா அன்வார், கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் ஆகியோர் சிறப்பு வருகைபுரிந்தனர்.
இவர்களை கிள்ளான் லிட்டில் இந்தியா தொழில் முனைவோர் சங்கத்தின் (LIKEA) தலைவர் சார்ல்ஸ் மணிகம் அன்புடன் வரவேற்றார்.
சுமார் 8 முக்கிய கடைகளை உட்படுத்திய இந்த walk-about நிகழ்வில் பிரமுகர்கள் வணிகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பல கடைகளில் மாலை, பொன்னாடை அணிவித்து பிரமுகர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
பலர் நூருல் இசாவுடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்; சிலர் விலைவாசி உயர்வு, புற்றுநோய் சிகிச்சை, மற்றும் வெளிநாட்டு வணிகர்களால் உண்டாகும் போட்டி போன்ற பிரச்னைகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
இது போன்ற நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது பன்முக கலாச்சார சிறப்பாகும் என நூருல் இசா குறிப்பிட்டார்.
2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50 தீபாவளி பரிசுக் கூடைகள் உள்ளூர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதுடன் இனிதே நிறைவடைந்தது.
பண்டிகை காலத்துக்கு முன்னதாக ஒருமைப்பாடு, அன்பு மற்றும் நம்பிக்கை என்ற செய்தியை இந்நிகழ்வு பறைசாற்றியது