
ஜித்ரா, ஜூலை-13 – கெடா, ஜித்ரா, கம்போங் சுங்கை பாருவில், தனது தாயின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம், வீட்டின் அருகே கடை வைத்திருக்கும் சந்தேக நபரின் உறவினர் ஒருவரால் கண்டறியப்பட்டது.
சந்தேக நபர் வீட்டுக்குள் நுழைந்து சென்ற 30 நிமிடங்களுக்குப் பிறகு, வரவேற்பறையிலிருந்து புகை கிளம்புவதை அந்தச் சாட்சி கண்டுள்ளார்.
தீ விபத்தில் வீட்டின் சுமார் 80 விழுக்காடு பகுதி எரிந்து நாசமானது.
அதிர்ஷ்டவசமாக, 60 வயதான தாயார் அப்போது அங்கு இல்லை; அவர் பொக்கோக் செனா பகுதியில் வசித்து வருகிறார்.
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ், தீயிட்டு நாசப்படுத்திய குற்றத்திற்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



