
ஈப்போ, நவம்பர்-8 – அண்ணன் – தம்பி சண்டையில், தம்பி பாராங் கத்தியால் வெட்டியதில் 56 வயது ஆடவருக்குத் தலையில் இரத்தம் கொட்டிய சம்பவம், பேராக் ஆயர் தாவாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயங்களுடன் அவர் மஞ்சோங் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர், 49 வயது தம்பி குடும்பத்தோடு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வாக்கில் அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் திடீரென கடும் சண்டை மூண்டுள்ளது.
தம்பி மகள் குளியறையில் இருந்த போது, வெளியிலிருந்து அண்ணன் கதவை எட்டி உதைத்ததால் தம்பி கோபமடைந்ததே சண்டைக்குக் காரணம் என, மஞ்சோங் போலீஸ் கூறியது.
பக்கத்து வீட்டுக்காரர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த போலீஸார், பிற்பகல் 2 மணி வாக்கில் சந்தேக நபரைக் கைதுச் செய்தனர்.
பாராங் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கூர்மையான ஆயுதத்தால் மோசமான காயங்கள் விளைவித்ததன் பேரில் தம்பி விசாரிக்கப்படுகிறார்.



