
கோத்தா பாரு, மே 29 – கிளந்தான் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலித்தான் நேற்று, குவா முசாங், கம்போங் பூலாயில் பயிர்களுக்கு சேதம் விளைவித்த இரண்டு ஆண் யானைகளைப் பிடித்தது. காட்டு யானைகள் சுற்றித் திரிந்து பயிர்களை அழிப்பது குறித்து மே 27 ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததாக கிளந்தான் வனவிலங்கு இயக்குநர் முகமட்
ஹபிட்ஸ் ரோஹானி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாநில யானைகள் பிடிப்புப் பிரிவைச் சேர்ந்த ஏழு பணியாளர்கள் நிலைமையைக் கண்காணிக்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த குழுவினர் Kampung Pulai யிலுள்ள தோட்டப் பகுதியில் வெற்றிகரமாக அந்த யனைகளை பிடித்தனர். இதன்வழி பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்ததோடு , வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையே மோதலால் ஏற்படும் இழப்புகள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என முகமட் ஹபிட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த இரண்டு யானைகளும் பகாங், லாஞ்சாங்கில், கோலா கந்தாவில் உள்ள தேசிய யானை பாதுகாப்பு மையத்தின் ஊழியர்கள் மற்றும் கிளந்தான் பெர்ஹிலித்தான் பணியாளர்களின் உதவியுடன் இடமாற்ற செயல்முறை விரைவில் மேற்கொள்ளப்படும். யானைகள் பிடிக்கப்பட்டாலும், இது நீண்டகால தீர்வாகாது என்று முகமட் ஹபிட்ஸ் கூறினார். இந்த தோட்டம் பத்து பாப்பன் மற்றும் உலு கலாஸ் நிரந்தர வனப்பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் , அங்கு 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்னும் சுற்றித் திரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் மற்றும் மனிதர்களுடனான மோதலைத் தணிக்க, உள்ளூர் விவசாயிகள் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவற்றில் தோட்டங்களுக்குள் தெரிந்த யானைப் பாதைகளில் நீல LED விளக்குகளை நிறுவுதல் மற்றும் அதிகப்படியான வளர்ச்சியைத் தவிர்க்க தோட்டப் பகுதிகளை தொடர்ந்து சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும். அவர்கள் தங்கள் தோட்டங்களைச் சுற்றி யானை மின்சார வேலி அமைப்புகளை அமைக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.