
குவாந்தான், மே-17 – கட்சியின் அடுத்தத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பி.கே.ஆரின் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்பை மாற்றியமைக்க நூருல் இசா அன்வார் உறுதியளித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் அல்லது ஒற்றுமை அரசாங்கத்தில் பி.கே.ஆர் ஒரு சிறிய கட்சியாக பின்தள்ளப்பட்டு விடக்கூடாது.
அதனைத் தாம் அனுமதிக்கப் போவதில்லை என பஹாங், குவாந்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் நூருல் இசா பேசினார்.
பி.கே.ஆர் தொடங்கப்பட்டதிலிருந்து, அது பெற்ற மலாய் வாக்குகளின் அதிகபட்ச சதவீதம் 1999-ல் தான்… ஆனால் அப்போதும் கூட, அது 55 விழுக்காட்டை எட்டவில்லை.
இப்போது சிலாங்கூர் தவிர்த்து மற்ற இடங்களில் மலாய் வாக்குகளில் பி.கே.ஆருக்கு தோராயமாக 30 விழுக்காடே கிடைத்து வருகிறது.
பி.கே.ஆரின் கோட்டையாக இருந்த பெர்மாத்தாங் பாவ் உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகள், 2022 பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வசம் சென்று விட்டன; தேசிய முன்னணியின் இரும்புக் கோட்டையான கெப்பாளா பாத்தாஸ் கூட கைமாறி விட்டது.
இது, கட்சியின் தேர்தல் வியூகங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாக நூருஸ் இசா குறிப்பிட்டார்.
பிரதமர் அன்வார் குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ் 15-ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் வசமானது.
பாஸ் கட்சி வேட்பாளரிடம் நூருல் இசாவே 5,272 வாக்குகளில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
பி.கே.ஆர் துணைத் தலைவருக்கானத் தேர்தலில் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியுடன் நூருல் இசா பலப்பரீட்சை நடத்துகிறார்.