
கூலாய், ஜூன்-15,
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு சைக்கிளோட்டி நேற்று காலை ஜோகூர், கூலாய், ஜாலான் கூனோங் பூலாய் பகுதியில், ஒரு டிரேய்லருடன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். கூலாய் போலீஸ் தலைவர், துணை ஆணையர் தான் செங் லீ அதனை உறுதிப்படுத்தினார்.
42 வயதான சைக்கிளோட்டி, மேலும் மூவருடன் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது, சாலைக் குழியில் சிக்கி கீழே விழுந்ததாக தெரியவந்தது.
அப்போது அவ்வழியே வந்த சிங்கப்பூருக்கு மணல் கொண்டு செல்லும் டிரேய்லர், அந்தச் சைக்கிளோட்டியைத் தவிர்க்க முடியாமல், அவர் மீது ஏறிவிட்டது. அதில் டிரேய்லருக்குக் கீழே சிக்கி, தலையில் கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
டிரேய்லர் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். சைக்கிளோட்டியின் உடல், தெமங்கோங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.