
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ் கூறியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த போது நேரம் அதிகாலை மணி 2.30; அப்பகுதியில் அப்போது பனிமூட்டமாக இருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, கெரிக் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் சுல்கிஃப்பிளி மஹ்மூட் கூறினார்.
சம்பவ இடத்தில் போதிய விளக்கொளியும் இல்லையென்றார் அவர்.
மே 11-ஆம் தேதியன்று நிகழ்ந்த அச்சம்பவத்தில் கோழிகளை ஏற்றிச் சென்ற அந்த லாரியால், திடீரென குறுக்கே ஓடிய யானைக் குட்டியை மோதுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இதனால் லாரியின் அடியில் சிக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
குட்டியை இழந்த வேதனையில் தாய் யானை அதே இடத்தில் ஓரடி கூட நகராமல் 5 மணி நேரங்களுக்கும் மேல் நின்றிருந்த வீடியோக்கள் வைரலாகி நாட்டையே உலுக்கின.
டிரேய்லர் ஓட்டுநர் வேகமாக ஓட்டிச் சென்றதே யானை பலியானதற்குக் காரணம் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் சமூக ஊடகங்களில் சிலர் கோரிக்கை எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது