
பேங்கோக், ஜூன்-19 – தாய்லாந்தின் பெண் பிரதமர் பெட்டோங்டர்ன் ஷினாவாட் (Paetongtarn Shinawatra) கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியது கசிந்திருப்பதை அடுத்து, அவர் பதவி விலக நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
மே மாதம் நடந்த மோதலில் கம்போடிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அண்மைய வாரங்களில் அவ்விரு அண்டை நாடுகளுக்கும் இடையே எல்லைப் பதட்டங்கள் அதிகரித்தது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
அந்த 17 நிமிட அழைப்பின் ஒளிப்பதிவை நேற்று ஃபேஸ்புக்கில் கசிந்து விட்டது.
அதில், தாய்லாந்து இராணுவத் தளபதி ஒருவரை சிறுமைப்படுத்தும் வகையில் பெடோங்டர்ன் பேசியதாகத் தெரிகிறது. அதாவது அந்த அதிகாரி “எல்லாமும் சுமூகமாகப் போய்க் கொண்டிருப்பது போன்றே நடந்துகொள்கிறார், பயனற்ற விஷயங்களைப் பேசினார்” என பெட்டோங்டர்ன் கூறினார்.
எனினும் விஷயம் கசிந்ததும், அந்த அழைப்பை “பேச்சுவார்த்தை நுட்பம்” என்று அவர் தற்காத்தார்; ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களோ, அவர் தாய்லாந்து இராணுவத்தை குறைத்து மதிப்பிட்டு பேசியிருப்பதாகக் கூறி, ராஜினாமா செய்ய அவரை வற்புறுத்தி வருகின்றனர்.
அதே சமயம் பெட்டோங்டர்ன் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது பெரியக் கட்சியான Bhumjaithai நேற்று அரசாங்கத்திலிருந்து விலகியது.
மேலுமிரு கூட்டணி கட்சிகள் தங்களின் நிலைப்பாடு குறித்து இன்று முடிவெடுக்கவுள்ளன.
இதனால் Phue Thai கட்சியின் ஆட்சி ஊசலாடுகிறது; ஏற்கனவே சிறிய பெரும்பான்மையில் உள்ள அரசாங்கத்திலிருந்து மேலும் சில கட்சிகள் வெளியேறினால், ஆட்சிக் கவிழுவது நிச்சயம்.
இவ்வேளையில், தாய்லாந்து பிரதமருடனான ஒளிநாடாவை தாம் கசிய விடவில்லை என , கம்போடியாவின் மிக நீண்ட கால பிரதமராக இருந்தவரான ஹுன் சென் கூறியுள்ளார்.
அதனை தாம் 80 அரசியல்வாதிகளுடன் பகிர்ந்ததாகவும், அவர்களில் யாரோ ஒருவர் தான் அதனை கசிய விட்டிருக்க வேண்டுமென அவர் கூறிக் கொண்டார்.
ஹுன் சென்னின் மகன் தான் தற்போது கம்போடியாவில் பிரதமராக உள்ளார் என்பது கூடுதல் தகவல்..