
கோப்பெங், ஜூன்-20 – பேராக், கோப்பெங்கில் உள்ள Kampung Ulu Geruntum பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக, கிராமத்தை இணைக்கும் முக்கியப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் ஓராங் அஸ்லி பூர்வகுடி சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
இதில் 3 கைக்குழந்தைகள், ஒரு கர்ப்பிணித் தாய் மற்றும் 2 முதியவர்கள் அடங்குவர்.
அதிர்ஷ்டவசமாக அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், உணவுப் பற்றாக்குறை இல்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
வேலைக்குச் சென்றுவிட்டு கிராமத்திற்குத் திரும்ப முடியாமல் மேலும் 30 குடியிருப்பாளர்கள் ஆற்றின் மறுபுறம் தவித்து வருகின்றனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, போலீஸ் JAKOA ஆகிய அமைப்புகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
வீடு திரும்ப முடியாத 30 பேரும் தற்காலிகமாக Gopeng Highlands Resort-டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், தொலைத்தொடர்புச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.



