
லக்னோவ், ஏப்ரல்-7-இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் தங்களின் மகளின் விவாகரத்தைக் கொண்டாடிய விதம் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகள் பிரணிதா வாசிஸ்தா, 7 ஆண்டுகள் நீடித்த திருமண பந்தத்தை முடித்த பின், வீட்டிற்கு திரும்பியபோது, குடும்பமே இசை, வாத்திய மேளங்களோடு, இனிப்பு, மாலை என திருமண விழாவைப் போலவே கொண்டாடியது.
தவிர, “I Love My Daughter” எனும் T-சட்டைகளை அணிந்து, மகளின் மகிழ்ச்சியே முக்கியம் என அவர்கள் ‘ஊருக்கே’ வலியுறுத்தினர்.
ஓய்வு பெற்ற நீதிபதியான மகளின் தந்தை, “என் மகள் மகிழ்ச்சியில்லாத திருமணத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவளை அந்த சூழலிலிருந்து வெளியே கொண்டு வருவது என் கடமை” என பெருமையுடன் கூறினார்.
இந்நிலையில் திருமண உறவிலிருந்து ‘விடுதலையான நிம்மதியில்’ பிரணிதா, “உங்களை வலுப்படுத்திக் கொள்ளுங்கள், கல்வி கற்றுக் கொள்ளுங்கள், சுயமாக நில்லுங்கள்” என்ற செய்தியை பெண்களுக்குப் பகிர்ந்தார்.
“மகளின் மகிழ்ச்சி – குடும்பத்தின் பெருமை” என்ற இச்சம்பவம், விவாகரத்தை ஏதோ செய்யக் கூடாத ஒரு குற்றமாக அல்ல, விடுதலையாக பார்க்கும் புதிய பார்வையை சமூகத்தில் உருவாக்கியுள்ளது.



