Latestமலேசியா

சலவை இயந்திரங்களில் பணத்தை திருடிவந்த திருடன் சுட்டுக் கொலை; மேலும் 8 பேர் கைது

ஜோர்ஜ் டவுன், மே 15 – இன்று விடியற்காலை 4.05 மணியளவில் போலீசாருடன் நடந்த மோதலில், தொடர்ச்சியாக சலவை இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன் சந்தேகத்திற்குரிய BMW கார் ஒன்று Bayan Lepas , Jalan Lintang Bukit Jambul லில் சென்றதை தொடர்ந்து குற்றச் செயல் துடைத்தொழில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ரோந்து கார் அதனை பின் தொடர்ந்து சென்றது.

அப்போது அக்காரில் இருந்த ஆடவன் திடீரென தனது காரை நிறுத்தி போலீஸ்காரர்களை நோக்கி சுடத் தொடங்கியதால் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக போலீஸ் குழுவினர் பதிலுக்கு சுட்டதால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அந்த சந்தேகப் பேர்வழி இறந்தான்.

அந்த நபரின் காரிலிருந்து ஒரு துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள், இரும்பு, பாராங் கத்தி, வீடு உடைக்க பயன்படும் பொருட்கள், மெத்தபெத்தமின் போதைப் பொருள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுட்டுக் கொல்லப்பட்ட 36 வயதுடைய ஆடவன் இதற்கு முன் 19 குற்றச்செயல்கள் மற்றும் 15 போதைப் பொருள் குற்றச்செயல் பின்னணியைக் கொட்டிருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 7 ஆடவர்கள் மற்றும் ஒரு பெண்ணையும் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபருடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு அவர்களில் நால்வர் பழைய குற்றச் செயல் பின்னணிகளை கொண்டிருந்தனர்.

இந்த கும்பல் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளையிடும் மற்றும் சலவைக் கடையில் கொள்ளையிடும் 25 சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஹம்சா தெரிவித்தார். அவர்கள் மேற்கொண்ட கொள்ளைச் சம்பவங்களில் ஐந்து லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!