
கோலாலம்பூர், மே-26 – தெலுக் இன்தான் நகரான்மைக் கழகத்திற்கும் ம.இ.கா கம்போங் தெர்சுன் கிளைத் தலைவர் ராமச்சந்திர தேவர் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையாவின் தலையீட்டினால் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது.
நகரான்மைக் கழகத்தின் முன்பகுதி கண்ணாடியை ராமச்சந்திர தேவர் உடைத்ததாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருக்கு நகரான்மைக் கழகம் கடையை வாடகைக்கு வழங்க மறுத்தது.
இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து தெலுக் இந்தான் மாவட்ட தலைவர் துவான் சைருல் அக்மல் காசிம் அவர்களுடன் நேரடியாக பேச்சு நடத்தியதன் பயனான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக முன்னாள் துணையமைச்சருமான டத்தோ முருகையா தெரிவித்தார்.
சைருல் அக்மாலுடன் நடத்திய பேச்சின்போது தாம் உண்மைநிலையை விளக்கி அவரை நம்பவைத்ததன் மூலம் கடையை மீண்டும் ராமச்சந்திர தேவருக்கு வழங்கும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதோடு ராமச்சந்திர தேவருக்கு எதிராக நகரான்மைக் கழகம் செய்திருந்த போலீஸ் புகாரையும் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று சைருல் அம்மாலை தாம் கேட்டுக்கொண்டதாகவும் விசாரணை அதிகாரியுடன் பேசி இதனை தீர்த்துக்கொள்வதற்கும் அவர் முன்வந்ததாக முருகையா தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தெலுக் இந்தான் ம.இ.கா தொகுதித் தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் செல்வராஜூ மற்றும் ம.இ.காவின் நியமனம் பெற்ற நகரான்மைக் கழக உறுப்பினர் ஸ்ரீ முருகனும் கலந்து கொண்டனர்.